கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம் : ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை – டெல்லி காவல்துறை

பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. இதனை நிராகரித்து வந்த கேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை போராட்டத்தை ஆம் ஆத்மி அறிவித்திருந்தது.

பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி காவல் ஆணையர் தேவேஷ் குமார் மஹ்லா; பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை. ஆம் ஆத்மி போராட்டம் நடத்தவோ, பேரணிக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. பிரதமர் இல்லம் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய பகுதியில் 50 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறுகையில், “பாதுகாப்பு காரணங்களுக்காக, லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு/வெளியேறும், படேல் சௌக் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 3 மற்றும் மத்திய செயலக மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் எண் 5 ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.