பேரூர் ஆதீனத்திடம் ஆசி பெற்றார் அண்ணாமலை : மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்து

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேரூர் ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார்.

கோவை மாவட்டம், பேரூர் ஆதீனம் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. இங்கு தற்போது  தவத்திரு சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார் ஆதீனகர்த்தராக உள்ளார்.  இந்த ஆதீனம் பக்தி மட்டுமல்லாது கல்வி சேவையிலும் சிறந்து விளங்கி வருகிறது. ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களது அறக்கட்டளையின் கீழ் பேரூரில் 1951-ம் ஆண்டு முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 

இது மட்டுமல்லாமல் பூண்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான முழு சேவைகளையும் இந்த ஆதினம் செய்து வருகிறது. இது தவிர பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அண்ணாமலை இங்கு சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசி ஆசி பெற்றார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தற்போது தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கட்சிக்காரர்கள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் இன்று காலை பேரூர் ஆதீனத்துக்குச் சென்ற அண்ணாமலைக்கு ஆதீனத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதையடுத்து சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை சந்தித்து காலில் விழுந்து வணங்கி அண்ணாமலை ஆசி பெற்றார்.  அவருக்கு மலர் கிரீடம் அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் ஆதீனகர்த்தர் ஆசி வழங்கினார். இதற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமலஹாசனும் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெறுவேன் என்று அண்ணாமலை உரத்து கூறி வரும் நிலையில் அதற்கான களப்பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்.