ராமேஸ்வரத்தில் தொடங்கியது மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் : இலங்கைக்கு கடும் கண்டனம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 58 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மார்ச் 16-ம் தேதி மற்றும் 20-ம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 58 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையில் இந்தத் தொடர் அட்டுழியத்தான் ராமேஸ்வரம் மீனவர்கள்  அச்சத்தில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமே முற்றிலுமாக பாதிக்கப்பட்டு போயுள்ளது.

இதையடுத்து ராமேஸ்வரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலங்கையில் சிறையில் உள்ள 58 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள  7 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏப்.8- ம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ராமேஸ்வரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அதுவரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து  காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அனைத்து படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தொழில் சார்ந்த பணிகள் செய்யக்கூடியவர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.