அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் இன்று (வியாழன்) காலை முதல் சென்னை, மதுரையைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருமான வரித் துறை தகவலின் அடிப்படையிலேயே இன்று சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சென்னையில் இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த சோதனையின் நீட்சியாகவே இன்று சோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.