மோடி ரோடு ஷோவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள் : விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்

கோவையில் நேற்று பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தென் மாநிலங்களில் முகாமிட்டு தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கோவையில் சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் பகுதி வரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் ரோடு ஷோ பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு பூக்கள் தூவி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் சீருடையுடன் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது போன்ற பிரச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தீவிரமாக எச்சரித்துள்ளது. அதனை கடைபிடிக்காமல், பிரதமரின் பேரணியில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீருடையுடன் நின்றிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆகியோர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைகளின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.