நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா : பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், பல்கலைக் கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள தேசிய புவியறிவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர், பேராசிரியர் என்.வி.சலபதி ராவ் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். விழாவில் மொத்தம் 571 பேருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார். அதில், 111 பேர் (ஆண் 14; பெண் 97) தங்கப்பதக்கமும், 460 பேர் (ஆண் 83; பெண் 377) முனைவர் பட்டங்களும் பெற்றனர். இவற்றுள் தமிழக அளவில் மிக அதிகமாக சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டில் 377 ஆய்வு மாணவியர் முனைவர் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக கணிதத் துறையில் பயின்ற ஜெஸ்வின் டைட்டஸ் என்ற மாணவர் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் முதலிடம் பெற்று, பல்கலைக்கழகத்தின் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்றார். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 33,821 பேர் (571 பேர் நேரிலும் 33,250 பேர் நேரில் கலந்து கொள்ளாமலும்) இன்று பட்டம் பெற்றனர்.