ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார், விஜயகுமார் மற்றும் திருவள்ளூர் நத்தமேடு நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள்.

தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மூன்று பேரும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும், இவர்களுக்கு எதிராக குண்டர் தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார். ஆகையால் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூன்று பேரது ஜாமீன் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.