வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க விசிகவிடம் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

வக்பு சட்டத் திருத்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் வந்தால் விசிக எம்பி-க்கள் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவனிடம் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் மற்றும் பொறுப்பாளர்கள் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:வக்பு சட்டத் திருத்த மசோதாவின்படி, முஸ்லிம் அல்லாதவர்கள் வாரியத்துக்கு தானம் செய்யக்கூடாது. ஆனால், வாரியத்தை நிர்வாகம் செய்யலாம் என்பது தவறான உள்நோக்கம் கொண்டது. ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பிணையில் வர முடியாத சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிறைய குளறுபடிகளுடன் சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றவும், இஸ்லாமிய சமுதாய மக்களின் உரிமைகளை பறிக்கவும் ஆளும் மத்திய அரசு திட்டமிடுகிறது.

எனவே, வக்பு வாரிய சட்டத்தில் தேவையில்லாத திருத்தங்களைக் கொண்டு வரும் மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மக்களவையில் மீண்டும் வாக்கெடுக்கும் சூழல் வந்தால் அதை புறக்கணிக்காமல் விசிக உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.