அக்.24 மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி : இபிஎஸ்

சிவகங்கையில் வரும் அக்.24ம் தேதி நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாமன்னர் மருதுபாண்டியரின் 223-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி அக்.24ம் தேதியன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக சார்பில், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பாஸ்கரன் இசக்கி சுப்பையா, ஆ.மணிகண்டன், பி.ஆர்.செந்தில்நாதன், முனியசாமி , கணேசராஜா, பி.சரவணன், என்.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மருதுபாண்டியருக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று இபிஎஸ் கூறியுள்ளார்.