ஊட்டி மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் சேவை ரத்து

குன்னூர் – உதகை இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் சீரமைக்கும் வரை தற்காலிகமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டது. என்றபோதும் வழக்கம் போல் குன்னூர் – உதகை இடையே மலை ரயில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மூன்று இடங்களில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் குன்னூலிருந்து உதகைக்கு செல்ல வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, குன்னூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மலை ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.