கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 490 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் – புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (அக்.16 )காலை கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் திடீர் காற்றோடு மழை பெய்யும் என்பதாகும்.

கடலூர் மாவட்டத்தில் (செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து இருந்து புதன்கிழமை காலை வரை) புவனகிரியில் 81 மில்லி மீட்டரும், விருத்தாசலத்தில் 60.2 மில்லி மீட்டரும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 58.6 மில்லி மீட்டரும், வேப்பூரில் 55 மில்லி மீட்டரும், லால்பேட்டையில் 50.2 மில்லி மீட்டரும், கடலூரில் 36.2 மில்லி மீட்டரும், அண்ணாமலை நகரில் 32 மில்லி மீட்டரும் ,சிதம்பரத்தில் 29.5 மில்லி மீட்டரும், காட்டுமன்னார்கோவிலில் 13.3 மில்லி மீட்டரும் பண்ருட்டியில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.