‘அறிவிற் சிறந்து அப்துல் கலாமுக்கு இளைஞர்கள் பெருமை சேர்க்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளது:

“கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று!

நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அப்துல் கலாம் பயின்று, பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம். அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபடும் தமிழர்களுக்கு, ஆண்டுதோறும் விடுதலை நாளில் ‘டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது’ வழங்கி வருகிறோம்.

நமது இளைஞர்கள் காணும் கனவுகள் மெய்ப்படத்தான் “நான் முதல்வன்” உள்ளிட்ட திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வியின் துணைக்கொண்டு, அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும்” என்று முதல்வர் கூறியுள்ளார்.