புதுக்கோட்டை தமிழ்ச் சங்கமும், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டமும் இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமாரின் பன்முகப் பணிகளுக்கு பாராட்டுவிழா

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கமும், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டமும் இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமாரின் பன்முகப் பணிகளுக்கு பாராட்டுவிழா இன்று நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதாவது: அறிவுச் சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர் முனைவர் ஆர்.ராஜ்குமார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமமான ஆலங்காட்டில் பிறந்து மிகச்சிறந்த சமூக விஞ்ஞானியாக உயர்ந்தவர் ஆர்.ராஜ்குமார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் இயக்கத்திலும், அறிவொளி, வளர்கல்வி, தொடர் கல்வி இயக்கங்களிலும் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எழுத்தறிவு இயக்கத்தின் மூலமாக அறியாமை இருளை அகற்றவும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும், அறிவியல் மனப்பாண்மையை வளர்க்கவும் அரும்பணி ஆற்றியுள்ளார்.

நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த சில வருடங்களாக சிறப்பான பங்களிப்பைச் செய்து வருபவர் ஆர்.ராஜ்குமார். ‘ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானி’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இளம் விஞ்ஞானியாக உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ‘ராஜ்குமாரின் பன்முகப் பணிகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிஞர் நா.முத்துநிலவன், சமம் ஒருங்கிணைப்பாளர் என்.கண்ணம்மாள், ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து, பேரா.சா.விஸ்வநாதன், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், நான்சி.ஜே.அனபெல் ஆகியோர் பேசினர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.ரெங்கலெட்சுமி, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, கவிஞர் ஜீவி, கவிஞர் ராசி.பன்னீர்செல்வம், கவிஞர் மகாசுந்தர், கவிஞர் கீதா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஆர்.சித்ரா ராஜ்குமார் ஏற்புரை வழங்கினார். முன்னதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் க.சதாசிவம் வரவேற்க. அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ம.வீரமுத்து நன்றி கூறினார்.