‘சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்’ – பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். விஜய் கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக கலந்துகொள்ளும் பொது நிகழ்வு இது என்பது கவனிக்கத்தக்கது.

பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலை முன்பு மாலை வைத்து, பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய், முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த உறுதிமொழியுடன் கூடிய வாழ்த்து செய்தியில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.

சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என விஜய் தெரிவித்துள்ளார்.