இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் இன்று காலையில் ராமேசுவரம் திரும்பினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின், செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த ஜுலை 23-ம் தேதி அன்று கைப்பற்றப்பட்டது.

படகுகளிலிருந்த ஆரோக்கிய ஹரி கிருஷ்ணன் (50), சகாய ராபர்ட் (49), யாகோப் (29), முத்துராமலிங்கம் (65), ராதா (44), சேகர் (40), பொன் ராமராஜ் (26), ராம்குமார் (24), லிபின் சாய் (25) ஆகிய 9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று ஊர்காவல்துறை நீதிமன்றம், 7 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தது. அதேசமயம், விசைப்படகுகளின் ஓட்டுநர்களான ஹரி கிருஷ்ணன, சகாய ராபர்ட் ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்று புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். பின்பு மீனவர்கள் 7 பேரும் மீன்வளத்துறையினர் மூலம் தனி வாகனத்தில் ராமேசுவரத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர்.