டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உள்பட இந்தியா – சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில், இந்தியா – சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டுநாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்ட பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு பிரதமர்கள் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதுக்குழுக்களுடன் இணைந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே நான்கு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் வோங் முன்னிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சைபர்-பாதுகாப்பு, 5G, சூப்பர் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் டொமைனில் உள்ள திறமையான தொழிலாளர்கள் ஆகியவை தொடர்பாக இரு நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா-சிங்கப்பூர் இடையே செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) சுற்றுச்சூழலுக்கான ஒரு கூட்டாண்மையை நிறுவுகிறது. சிங்கப்பூர் நிறுவனங்கள், இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

சுகாதாரம் மற்றும் மருத்துவம், கூட்டு ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில், இரு நாடுகளின் சுகாதார அமைச்சகங்களுக்கிடையே மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் இடையே கையெழுத்தான இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான திறன் மேம்பாட்டு முயற்சிகளை பூர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரில் உள்ள ஏஇஎம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குறைக்கடத்தி வசதியை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது நண்பரான பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான கலந்துரையாடல் இன்றும் தொடர்ந்தது. திறன், தொழில்நுட்பம், சுகாதாரம், AI மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் எங்கள் பேச்சுக்கள் கவனம் செலுத்தின. வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக்கொண்டோம்.

செமிகண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்பம் இந்தியா – சிங்கப்பூர் ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களாகும். இதுவும் இந்தியா தனது இருப்பை அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு துறையாகும். இன்று, பிரதமர் வோங் மற்றும் நான் இருவரும் AEM ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சென்றோம். இந்தத் துறையில் இணைந்து பணியாற்றவும், நமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்துள்ளார்.