“டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை 4 பேர் என்ற அளவில் தான் உள்ளது. வரும் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன் மற்றும் சுகாதாரத் துறை, விமான நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு நாளொன்றுக்கு சராசரியாக 58-லிருந்து 64 சர்வதேச விமானங்கள் வருகின்றன. அந்த வகையில் இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளை சோதனை செய்துள்ளோம். சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நான்கு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. மாதா மாதம் மழை பெய்வதால் எட்டு மாதங்களில் டெங்குவின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. என்றபோதும் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது. இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்கள் மழை காலம் என்பதால் பெங்குவின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட 11 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அந்தச் சிறுமி ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் கடையில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு, காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.