சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவன் 309-வது பிறந்த நாள் விழா : முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவன் அவர்களின் 309-வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, 01.09.2024 அன்று நடைபெறவுள்ள சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் பெருமக்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் (செய்தி), சிவகிரி வட்டாட்சியர் (பொ) மைதீன் பட்டாணி, வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, மல்லிகா, உதவிப் பொறியாளர்கள் ஹவாஷகாரா, அருண் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.