மதுரையில் எம்எல்ஏ வீடு முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மாநகர் திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன், எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக ஆளுநரை மாற்றக் கோரி மானகிரி கணேசன் கடந்த 6 மாதம் முன்பு சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதில் உடல்நலன் பாதித்தார். திமுகவினர் கண்டுகொள்ளவில்லை எனவும், உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்ற விரக்தியிலும் இருந்துள்ளார். மேலும், திமுகவினர் சிலர் கட்சியின் பெயரை சொல்லி பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமைக்கும், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கு புகார் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மூலக்கரை பகுதியிலுள்ள திமுக எம்எல்ஏ கோ.தளபதியை சந்தித்த நிலையில் அவரது வீட்டின் முன்பாக தீக்குளித்து 90% காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரிக்கின்றனர். திமுக எம்எம்ஏவை சந்தித்தபிறகு அக்கட்சி நிர்வாகி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.