மத்திய பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ – ஜான்சி நெடுஞ்சாலையில் பாகேஷ்வர் நோக்கி ஆட்டோ ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 13 பேர் பயணம் செய்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின் அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 1 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் கூறுகையில், “இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேர் மேல்சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இறந்தவர்கள் ஆட்டோ டிரைவர் பிரேம் நாராயண் (46), ஒரு வயது குழந்தை அஸ்மா, ஜனார்தன் யாதவ் (45), மனு ஸ்ரீவஸ்தவா (25), கோவிந்த் ஸ்ரீவஸ்தவா (35), நன்னி புவா (42) மற்றும் லாலு என அடையாளம் தெரியவந்துள்ளது” என்றனர்.