தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், குரங்கம்மை பாதிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இது தொடர்பான கூட்டத்தை கூட்டி இந்தியாவில் யாரும் குரங்கம்மை நோயால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கம்மை நோய்த் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. குரங்கம்மை பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து விமான நிலையங்களிலும் வைக்க இருக்கிறோம். நானும் அதை ஓரிரு நாட்களில் ஆய்வு செய்ய இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.