ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை சல்பேட் என்ற வேதிப்பொருளை இறக்கியபோது ஏற்பட்ட வெடி விபத்தில், இரு தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று ‘ஜெயந்தி ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற பட்டாசு ஆலையை நடத்தினார். இப்போது இந்த பட்டாசு ஆலையை சிவகாசியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் உள்ள 42 பட்டாசு ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். காலை 10 மணி அளவில், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருளான சல்பேட் வேதிப்பொருளை வேனில் இருந்து மருந்து பொருட்கள் இருப்பு வைக்கும் அறையில் வைக்க இறக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேதிப்பொருட்கள் இருப்பு வைத்திருந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் வேதிப்பொருட்கள் ஏற்றி வந்த வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் நாகபாளையத்தைச் சேர்ந்த புள்ளகுட்டி, குன்னூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து மல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.