ஓன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் மறியல் போராட்டம். புதுக்கோட்டையில் 550 பேர் கைது

ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டை புறக்கணித்தும், ஏழை, எளிய மக்கள் மீது கொடூரமான புதிய வரிகள் விதித்தும், பெரு முதலாளிகளுக்கு சலுகைகளைத் தந்தும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்டச் செயலாளர் வீ.மூ.வளத்தான் ஆகியோர் தலைமை வகித்தார்.

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை, சிபிஐ(எம்எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.தர்மராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் என 75 பெண்கள் உட்பட 550 பேரை கைதுசெய்த போலீசார், பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர்.