ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இத்தலம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 9 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், ராம்கோ குழும இயக்குநர் நிர்மலா ராஜூ, ராம்கோ கல்வி குழும இயக்குநர் ஶ்ரீகண்டன் ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் லட்சுமணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். இதில், ஆகஸ்ட் 2-ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.

3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பகத்தோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவை நடைபெறும்.

5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.