சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி கொலை – உறவினர்கள், கட்சியினர் மறியல்

சிவகங்கை அருகே பாஜக பிரமுகரை வெட்டிக் கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். மேலும் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தரசன்கோட்டை அருகே வந்த அவரை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் உயிரிழந்தார்.

அங்கு கூடிய வேளாங்குளம் கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன்உமேஷ் சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர். தொடர்ந்து செல்வக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று காலை மீண்டும் குற்றவாளிகளை உடனே செய்ய வலியுறுத்து சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் அக்கட்சியினர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.