நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி : கேரள எல்லை பகுதியில் தென்காசி சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். அம்மாநிலத்தில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி, கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் புளியரை சோதனைச் சாவடியில் இன்று முதல் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் கூறும்போது, “கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டம் கேரள மாநில எல்லையையொடி உள்ளதால் புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைவரிடமும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்படுகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சாதாரண காய்ச்சலா அல்லது நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 15 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.” என கோவிந்தன் கூறினார்.