கவுரவ விரிவுரையாளர் ஊதியத்தை அந்தந்த மாதமே வழங்க அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழகம் முழுவதும், அரசுக் கல்லூரிகளில் சுமார் 7,300-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் தான். அதிலும் பலர், சிறப்புத் தேர்வு எழுதிப் பணி வாய்ப்பைப் பெற்றவர்கள். நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் ரூ.80,000 ஆக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், முதல் மாத ஊதியத்தை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கௌரவ விரிவுரையாளர்களே, மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகச் சொற்பமே.

எனவே, பல்கலைக்கழக மானியக் குழு, கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை, திமுக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.