மத்திய பட்ஜெட்டில் மெட்ரோ திட்டம் உட்பட தமிழக தேவைகளை நிறைவு செய்ய முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட்டில் நிறைவு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் இந்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்தி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்டாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும்.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவுச்சாலை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பத்தாண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்க வேண்டும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

நடப்பு 2024 – 25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். முன்னதாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மத்திய அரசின் 2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடி 3.0 அரசின் கீழ் நிதியமைச்சர் வரி செலுத்துவோருக்கு சில சலுகைகள் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் உருவாகியுள்ளன. அவ்வாறு எதிர்பார்க்கப்படும் நன்மைகளில் ஒன்று, நிலையான விலக்கு வரம்பு உயர்வு, இது நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.