‘சிபிஐயின் வஞ்சக நடவடிக்கை’ – கேஜ்ரிவால் கைது வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் வாதம்

பணமோசடி வழக்கில் தனக்கு எதிரான மத்திய புலனாய்வு முகமையின் (சிபிஐ) கைது ஒரு வஞ்சகமான நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது: “ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டும் என்று சிபிஐ விரும்பியதால், அவரை வஞ்சகமாக கைது செய்துள்ளது.

எனக்கு சாதகமாக மூன்று உத்தரவுகள் என்னிடம் உள்ளன. ஒன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன், இரண்டாவது தற்போது வழங்கப்பட்டிருக்கும் இடைக்கால ஜாமீன். மிகக் கடுமையான பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், இந்த நீதிமன்றத்தால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் துரதிருஷ்டவசமாக இது ஒரு காப்புறுதி கைதாகும். சிபிஐ கைது செய்ய விரும்பவில்லை, அதனிடம் கைதுக்கான தெளிவான நோக்கமோ, பொருளோ இல்லை. ஆனால் மற்ற வழக்குகளில் (அமலாக்கத்துறை) கேஜ்ரிவால் வெளியே வந்துவிடுவார் என்று சிபிஐ உணர்ந்தது. அதனால் அவரைக் கைது செய்தது.

அவர் ஒரு முதல்வர், தீவிரவாதி இல்லை. அவர் யாரையும் கடத்தவில்லை. ஆதாரத்தில் குறுக்கிடுபவர் இல்லை. சிபிஐ-ல் உளவியல் ரீதியாக மாற்றத்தின் காற்று வீசுகிறது என்று தெளிவாக தெரிகிறது. நான் சிபிஐ-யை குறைகூற விரும்பவில்லை. இந்தக் காற்று வேறு சிலரின் மனதில் வீசுகிறது” என்று தெரிவித்தார்.

சிங்வி தனது வாதத்தின் போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது பற்றியும் கூறிப்பிட்டார். அவர் “மூன்று நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டார், ஆனால் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்” என்றார்.

அரவிந்த் கேஜ்ரிவால் மீதான மதுபானக் கொள்கை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அவரை ஜூன் 26ம் தேதி திஹார் சிறையில் வைத்து கைது செய்தது. முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத் துறையின் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி இருந்தது.