“காவிரி பிரச்சினையில் கர்நாடகா முடிவை ஏற்க முடியாது, உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” – முதல்வர் ஸ்டாலின்

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தலைமையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு தேவைப்படின், உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

தமிழகத்துக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரினை சென்ற ஆண்டு கர்நாடக அரசு விடுவிக்காததால் வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி அதன்பிறகு நீரை பெற்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழலிலும் கர்நாடக அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை தீர்மானங்களாக இயற்றப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் காவிரி நீர் ஒழுங்கற்று குழு தற்போது உத்தரவிட்டுள்ளவாறு தமிழகத்துக்கு காவிரி நீரை தரமுடியாது என மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்துகிறோம்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு தேவைப்படின், உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒருமனதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழு முயற்சியோடு மேற்கொண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன்” என்று முதல்வர் தெரிவித்தார்.