சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை காலை 9 மணி அளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த மாரியப்பன், முத்துவேல் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சரோஜா, சங்கரவேல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பலி சரோஜா, நேற்று இரவும், அவரைத் தொடர்ந்து இன்று அதிகாலை சங்கரவேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.