தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் ஜாமீன் பெற்றார்.

தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட உள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.