மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்தல் : திமுக கிளைச் செயலாளர் கைது

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்திய சம்பவம் தொடர்பாக திமுக கிளைச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர். 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த போலீஸார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தமிழக – கர்நாடக எல்லையை ஒட்டி காவிரி ஆறு உள்ளது. இதில் அடிபாலாறு, காரைக்காடு, செட்டிப்பட்டி, கோட்டையூர், காவிரிபுரம், கருங்கல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து வருவதாக புகார் உள்ளது. இதனிடையே, மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி காவிரி ஆற்றில் மணல் கடத்துவதாக மேட்டூர் டிஎஸ்பி-யான ஆரோக்கியராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனிப்படை அமைத்து மணல் கடத்தும் நபரை பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், தனிப்படை போலீஸார் செட்டிப்பட்டி, காரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி ஆற்றில் இருந்து 2 டிராக்டர்கள் மூலம் மணலை ஏற்றிக்கொண்டு காரைக்காடு வழியாக சிலர் வந்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸாரை பார்த்ததும், டிராக்டர் டிரைவர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், அவற்றை கொளத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட அந்த டிராக்டர்களும் செட்டிப்பட்டி திமுக கிளைச் செயலாளர் பழனிசாமி (55) மற்றும் சடையன் (எ) வேலுமணி (50) ஆகியோருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து திமுக கிளைச் செயலாளர் பழனிசாமியை கைது செய்தனர். உடனடியாக அவரை பின்னர் பிணையில் விடுவித்த போலீஸார், தப்பி ஓடிய சடையன் (எ) வேலுமணியை (50) தேடி வருகின்றனர்.

இதனிடையே, போலீஸார் வாகனச் சோதனையின்போது, மணலுடன் மேலும் ஒரு டிராக்டர் வந்தது. ஆனா, போலீஸாரைக் கண்டதும் அந்த டிராக்டரில் இருந்தவர்கள் மணலை சாலையில் கொட்டிவிட்டு டிராக்டருடன் தப்பி ஓடி விட்டனர். தப்பியோடிய அந்த நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.