பிணைக் கைதிகள் ‘கூகுள் லொகேஷன்’ பகிர நிபந்தனை விதிக்கக் கூடாது : உச்ச நீதிமன்றம்

பிணைக் கைதிகள் ‘கூகுள் லொகேஷன்’ பகிர நிபந்தனை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பிணை கைதிகளின் இருப்பிடங்களை கண்காணிக்கும் வகையில் கூகுள் லொகேஷனை கோரவோ, பகிரவோ போலீஸாரும், நீதிமன்றங்களும் நிபந்தனை விதிக்கக் கூடாது. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்.

ஜாமீனின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில் ஜாமீன் நிபந்தனைகள் இருக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கலாம். ஆனால், அதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் ஜாமீன் நிபந்தனை இருக்க முடியாது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையாக பிணைக் கைதி விசாரணை அதிகாரியிடம் தனது ‘கூகுள் லொகேஷன்’ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2022ம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் தற்போது இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ளது.