“கள்ளச் சாராய உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் பேசக்கூட தயாராக இல்லை” – எல்.முருகன் சாடல்

“தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் சுமார் 55 பேர் இறந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 36 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போது வரை அவர்களை நேரில் சென்று பார்க்காமல் இருக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் போன்றவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாடியுள்ளார்.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் சுமார் 58 பேர் இறந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 36 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும், சமூக நீதி பேசுகின்ற இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று வரை அவர்களை நேரில் சென்று பார்க்காமல் இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் போன்றவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை. மேலும், அதனால் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற நமது தலைவர்கள் சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். போலியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சமூக நீதிக்கு மத்தியில், அரசமைப்புச் சட்டத்தை மதிக்கக் கூடிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்” என்று எல்.முருகன் கூறினார்.