“கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – நிர்மலா சீதாராமன்

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 57 பேர் இறந்துள்ளனர். பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பட்டியலின மக்கள். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசால் நடத்தப்படும் ‘டாஸ்மாக்’ எனப்படும் கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் கிடைக்கும் நிலையில், அதையும் மீறி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் ரசாயனம் கலந்த சட்டவிரோத கள்ளச் சாராயம் கிடைக்கிறது.

இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே?. ராகுல் காந்தி எங்கே?. கள்ளச் சாராயத்தால் பட்டியலின மக்கள் இறக்கும் போது, ​​ராகுல் காந்தியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.