மருத்துவ நிபுணர் இபிஎஸ் சொன்ன மருந்து தேவைக்கு அதிகமாகவே கையிருப்பு உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் பின்பற்றப்படும் என தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘Omeprazole – Fomepizole குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி. 20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன். பிறகு இன்று Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்’ என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.