மகாராஷ்டிரா உள்பட 4 மாநில தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகும் பாஜக – பொறுப்பாளர்கள் நியமனம்

மகாராஷ்டிரா உள்பட 4 மாநில தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் பாஜக, 4 மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த 4 மாநில தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 4 மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எனினும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், பாஜக 9 தொகுதிகளிலும், சிவ சேனா 7 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

எதிர்தரப்பில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே கட்சி 9 தொகுதிகளிலும், சரத் பவார் கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மகாராஷ்டிராவில் வரும் நவம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்பதால், இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டே தற்போதே தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

ஹரியாணாவில் இந்த ஆண்டு அக்டோபருக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் தற்போது பாஜக தனித்து ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது இம்மாநிலத்துக்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக திரிபுரா மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பிப்லப் குமார் தேப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். இம்மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இம்மாநிலத்தை பாஜக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துள்ளது.

கடந்த முறை பாஜகவிடம் இருந்தே ஆட்சி கை மாறியது. இதை கருத்தில் கொண்டு இங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாநில கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஜம்மு காஷ்மீரும் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இம்மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டே இம்மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.