குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி இளைஞர் குடும்பத்துக்கு கனிமொழி நேரில் நிவாரண நிதி

குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக அறிவித்த ரூ.5 லட்சத்தை திமுக எம்.பி-யான கனிமொழி இன்று நேரில் வழங்கினார்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது.

இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பனும் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 15-ம் தேதி இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வானரமுட்டி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மாரியப்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே குவைத் அடுக்குமாடி தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் உள்ள மாரியப்பன் இல்லத்துக்கு திமுக எம்பி-யான கனிமொழி சென்று மாரியப்பன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவரது தாய் வீரம்மாள், மனைவி கற்பகவள்ளி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், அரசின் ரூ.5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையையும் அவர்களிடம் வழங்கினர். அப்போது மாரியப்பன் மனைவி கற்பகவள்ளி தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி கனிமொழி எம்பி-யிடம் மனு கொடுத்தார். கனிமொழி வருகையின் போது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.