கரூரில் பிறந்து 30 நிமிடங்களே ஆன ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு

காவல்காரன்பட்டி அருகே, பிறந்து 30 நிமிடங்களேயான ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை அருகேயுள்ள காவல்காரன்பட்டி பகுதியில் நேற்றிரவு சாலையோரம் இருந்த முட்புதரில் இருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. சாலையில் சென்ற பொதுமக்கள் முட்புதர் அருகே சென்று பார்த்தபோது, பிறந்த 30 நிமிடங்களேயான ஆண் குழந்தை முட்புதரில் கிடந்துள்ளது.

அதனை மீட்ட பொதுமக்கள் காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைந்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

பிறந்து 30 நிமிடங்களேயான குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றது யார், அது தவறான உறவில் பிறந்த குழந்தையா என தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே பகுதியில் முட்புதரில் இறந்த நிலையில் ஆண் சிசு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.