“பாஜகவுடன் கூட்டணி அமைக்காததால் அதிமுக தோல்வி” – மதுரை ஆதீனம் கருத்து 

“மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காததால் அதிமுக தோல்வியை தழுவியது,” என்று மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடிக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்துக் கட்சிகளும் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளன, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்தால்தான், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடிய வில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

இந்திரா காந்தி தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். அத்தீவை மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். கச்சத்தீவு மீட்டு தமிழகத்தோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்தவேண்டும். இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு பிரதமர் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். 60 ஆண்டாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை.

பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கின்றனர். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது. இருப்பினும், இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு வாக்கு அளித்து இருக்கிறார்களே? அதுதான் எனக்கு வருத்தம். இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டுக்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். சீமான் என்னை சந்தித்தபோது, பிரதமரிடம் இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க கோரிக்கை வைக்க சொன்னார். காமராஜர் தோல்வியுற்றபோது கட்சிக்காரர்கள் நாம் தோற்றுவிட்டோமே என கூறினர். காமராஜர் இதுதான் ஜனநாயகம் என்றார்.

எதிர்க்கட்சிகள் பிரதமரை விமர்சனம் செய்கிறது. திட்டத்திட்ட திண்டுக்கல்லு, வய்ய வய்ய வைரக்கல்லு, பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என, விமர்சனம் செய்கின்றனர்.

பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறி இருப்பர். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பு. 243 தொகுதிகளில் வென்றுள்ளதால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என, கூறமுடியாது. 60 ஆண்டாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது.

பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்காக தனிநாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுப்பேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார். விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் கோயிலை மீட்டெடுத்தார். பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். அவரை நான் ஆதரிக்கிறேன். பாஜகவுக்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை.

தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. கடந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் ,சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கின்றனர்” என்று மதுரை ஆதீனம் கூறினார்.