‘பிரிந்தவர்களிடம் பேசி கட்சியை ஒருங்கிணைக்க அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு’

அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் இன்று மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இனிமேலும் இத்தகைய தோல்வி ஏற்படாமல் இருப்பதற்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அதற்காக நாங்கள் ஒரு அணியில் இருந்து இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்பதால் நாங்கள் இருந்த அணியில் இருந்து விலகி, தற்போது அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளோம்.

வெறுமனே அறிக்கையோ அல்லது சமூக வலைதளத்தில் பதிவையோ வெளியிட்டால் மட்டும் போதாது. தொண்டர்கள், தலைவர்கள் மனதைத் தொடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனால்தான் அதிமுக தொண்டர்கள், தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் இன்று தொடங்கியுள்ளோம். இதற்காகவே எதிரும் புதிருமாக இருந்த நாங்கள் ஒன்றாகி இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. தற்போதைய சூழலில் அதிமுகவை அழிக்கப் பார்க்கின்றனர். இதை தலைவர்களும், தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். அப்படிப்பட்ட உன்னதமான இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்றுபடுவது அவசியம். இதைத்தான் மக்களும், கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர். எனவே, அதிமுகவில் உள்ள அனைத்து அணியினரும், தொண்டர்களும் தங்கள் கருத்தை அதிமுக ஒருங்கிணைப்புக் குழு, எண்,44, கோத்தாரி சாலை, சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். அல்லது 9003847889 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தொண்டர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஒருமித்த கருத்துடன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வோம். எந்த அணியையும் சாராமல் கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் மட்டும் ஈடுபட்டுள்ள எங்களுக்கு தலைவர்கள் கவுரவம் பார்க்காமல், காலம் தாழ்த்தாமல் ஒத்துழைக்க வேண்டுகிறோம். வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே உள்ளன. எனவே, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக ஒன்றிணைந்தாக வேண்டும்” என தெரிவித்தனர்.