கங்கனா 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை – ‘இமாச்சல் எனது ஜென்மபூமி’ என நெகிழ்ச்சி

இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன் என மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தனது இல்லத்தில் பிரார்த்தனை செய்தார். சமீபத்திய இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை விட 37,033 வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறுப்போது, “மும்பைக்கு நான் செல்வதை பொறுத்த வரையில்… இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன். அதனால், நான் வேறு எங்கும் செல்லப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். மண்டியில் கங்கனாவின் வெற்றிக்கு மோடியின் செல்வாக்கு மட்டுமே காரணம் என்றும் கூறப்படுகிறது.