“என்னுடன் களம் கண்ட அனைவருடனும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன்” – துரைவைகோ பேட்டி

மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 13,205 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்ட பின் துரைவைகோ பேசுகையில், “முதல் சுற்று மட்டும் அல்ல இறுதிச் சுற்று வரை தொண்டர்கள் அமைதி காக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன்.

முதல் சுற்றில் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதாக கட்சியினர் கூறியுள்ளனர். எனக்காக உழைத்த உழைத்துக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சியினர் மற்றும் மதிமுக தொண்டர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நான் வெற்றி பெற்றாலும் அனைத்து வேட்பாளர்களுடன் இணைந்து மக்கள் பணியாற்றுவேன்” என்றார்.

முன்னதாக, விசில் அடிக்கக் கூடாது, தேவையற்ற பிரச்சினைகள் செய்யக்கூடாது, அனைத்து கட்சிகளும் இன்முகத்துடன் கை கொடுத்துப் பழக வேண்டும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த முகவர்களுக்கு துரை வைகோ ஆலோசனை வழங்கினார். முதல் சுற்று நிலவரப்படி துரை வைகோ 26,186 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 12,981 வாக்குகளும் பெற்றுள்ளனர்.