சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா : பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

அரியலூர் அருகே கோயில் திருவிழாவில் தீமிதித்த பக்தர்கள் அம்மனுக்காக சாட்டையடி வாங்கி விநோத நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி மற்றும் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி விநோத நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் தீ மிதித்தனர். அதன்பின்னர் தீ மிதித்த பக்தர்கள் வரிசையில் நின்று, அம்மன் முன்பு சாட்டையடி வாங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த காட்சிகள் அருகில் இருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,” அம்மன் முன்பு சாட்டையடி வாங்கும் பக்தர்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமடையும். பில்லி, சூனியம், மற்றும் துஷ்ட சக்திகள் எதுவாக இருந்தாலும் அது விலகி ஓடிவிடும். இது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது என்பதால் சாட்டையடி வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என்றனர்.