வீட்டின் காவலாளியை தாக்கியதாக முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்கு

வீட்டின் காவலாளியை தாக்கியதாக முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார். அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், தனது பெயரில் உள்ள தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்குமாறு செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் கடிதம் அனுப்பி இருந்தார். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க வந்தபோது, அவர்களுடன் ராஜேஷ் தாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் மின் இணைப்பை அவர் துண்டிக்கவிடவில்லை என்றும் தெரிகிறது.

இதனால் மின் கம்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை ஊழியர்கள் துண்டித்து சென்றுள்ளனர். தற்போது ராஜேஷ் தாஸ் ஜெனரேட்டரை பயன்படுத்தி அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த பங்களா வீட்டை ராஜேஷ் தாசும், பீலாவும் இணைந்து வங்கி கடன் மூலம் வாங்கியதாக கூறப்படுகிறது.