முதல்முறையாக வாக்கு செலுத்திய பழங்குடியினர் : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

அந்தமான் நிக்கோபார் மக்களவைத் தொகுதியில் முதன்முறையாக ஷோம்பென் பழங்குடியினர் இம்முறை வாக்களித்தனர். எளிதில் பாதிக்கக்கூடிய பழங்குடியினக் குழக்களில் ஒன்றாக ஷோம்பென் பழங்குடியினர் கருதப்படுகின்றனர்.

நிக்கோபார் தீவின் அடர்ந்த வெப்ப மண்டல காடுகளில் வசிக்கும் இவர்களில் ஏழு பேர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்கு செலுத்தியபோது அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த புகைப்படங்களில் ஒன்றை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு எழுதிய பதிவு: நிக்கோபார் தீவிலிருந்து வாக்கு செலுத்திய ஏழு ஷோம்பென் பழங்குடியினரில் ஒருவர் இவர்.

யாராலும் தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத வலிமை பொருந்தியது ஜனநாயகம் என்பதை இது காட்டுகிறது. 2024 தேர்தலின் சிறந்த புகைப்படம் இதுவே. இவ்வாறு அவர் பதிவிட்டார். ஆனந்த் மஹிந்திராவின் கருத்தை வரவேற்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருவதால் அவரது பதிவு வைரலாகி உள்ளது.