‘நான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்’ : உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சால் பரபரப்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ், நேற்று ஓய்வு பெற்ற நிலையில் பிரிவுபசார விழாவில், தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்றவர் சித்த ரஞ்சன் தாஷ். இவருக்கு நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் பேசுகையில், “சில நபர்களின் வெறுப்புக்கு, நான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தேன், இருக்கிறேன் என்பதை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். நான் என் குழந்தை பருவத்தில் இருந்து எனது இளமைக்காவலம் முழுவதும் அதில் இருந்தேன். நான் தைரியமாகவும், நேர்மையாகவும், மற்றவர்களுக்கு சமமான பார்வையைக் கொண்டிருக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக தேசபக்தி மற்றும் வேலைக்கான அர்ப்பணிப்பு உணர்வை அங்கு கற்றுக்கொண்டேன். எனது தொழில் வாழ்க்கையின் எந்தவொரு முன்னேற்றத்துக்கும், எனது உறுப்பினர் பதவியை நான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அது, அதன் கொள்கைகளுக்கு எதிரானது.

நீதிபதியாக எனக்கு முன் அனைவரும் சமம். நான் யாருடனும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்துக்கும் அல்லது அமைப்புக்கும் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை. நான் என் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாததால், நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு தைரியம் இருக்கிறது. ஏனென்றால் அதுவும் தவறு அல்ல” என்று அவர் பேசினார்.

1962-ம் ஆண்டு ஒடிசாவின் சோனேபூரில் பிறந்த சித்த ரஞ்சன் தாஷ், உள்ளுண்டாவில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். அதைத் தொடர்ந்து தேன்கனல், புவனேசுவரத்தில் உயர் கல்வி பயின்றார். 1985-ல் கட்டாக்கில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். 1986-ம் ஆண்டு தாஷ், தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இணையதள தகவலின்படி, 1992 முதல் 1994 வரை மாநில அரசின் கூடுதல் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1999 பிப்ரவரியில், சித்த ரஞ்சன் தாஷ், ஒடிசா உயர் நீதித்துறை சேவையில் நேரடி சேர்ப்பில் (மூத்த கிளை) இடம்பெற்றார். கடந்த 2009 அக்டோபரில் ஒடிசா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2022 ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று பணி ஓய்வு பெற்றார்.