தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

அரசுப் பணிகளில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனங்கள்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்பதற்கேற்ப, மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவதையும், ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதையும், வெளிமுகமை மூலம் பணியமர்த்துவதையும் தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை ஒன்றைச் சொல்லிவிட்டு, அதற்கு மாறாக செயல்படுவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி போலும்.

பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும். இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை வரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வருகை இல்லாதது, புகைப்படக் கருவிகள் சரியாக இயங்காதது போன்ற காரணங்களினால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு நிலைமை இருந்தது. இந்தக் குறைபாடுகள் இந்த ஆண்டிலும் தொடர்கின்றன. செயலற்ற ஆட்சி என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக்காட்டு தேவையில்லை.

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றாக்குறை என்று அனைவரும் கூறி வந்ததை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தர்மபுரி, இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று இலட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காதபட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதன் விளைவாக மருத்துவ மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.