நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி இன்று மரணம்

நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே சொத்து பிரச்சினை காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த விவசாயி சங்கரசுப்பு 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருத குளத்தை சேர்ந்தவர் சங்கர சுப்பு (32). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். பூர்விக சொத்தில் பங்காளிகள் அவரது பங்கை பிரித்து தரவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக மூன்றடைப்பு காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மன உளைச்சல் அடைந்த சங்கரசுப்பு, கடந்த 13ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமர்ந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் அலறல் சத்தத்துடன் ஓடி வந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து, உடலில் 90 சதவீத அளவில் தீக்காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காய பிரிவில் சங்கர சுப்பு அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரசுப்பு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே இதே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமையால் மனைவி குழந்தைகள் உள்பட நான்கு பேர் குடும்பத்தோடு தீக்குளித்து உயிரிழந்தனர்.

அதைத்தொடர்ந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவுவாசலில் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீக்குளிப்பவர்களை உடனடியாக காப்பாற்ற வாசல் அருகே பிரத்யேகமாக குடிநீர் டேங்க் ஒன்றும் வைக்கப்பட்டது. ஆனாலும், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பலர் மண்ணெண்ணைய் மற்றும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடரும் நிலையில், சொத்து பிரச்சினையால் பெட்ரோல் ஊற்றி உடலில் தீவைத்துக்கொண்ட விவசாயி சங்கரசுப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.